Wednesday, July 31, 2013

தெலுங்கானா வரலாறும் போராட்டமும்


தெலுங்கானா போராட்டம் என்பது இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம்  முதல் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற பொழுது தெலுங்கு பேசும் மக்கள் மொத்தம் 22 மாவட்டங்களில் இருந்தனர். அவற்றில் 9 ஹைதராபாத் நிஜாமிலும், 12 மதராஸ் மாநிலத்திலும் இருந்தன. 

ஹைதராபாத் நிஜாம் ஓட்டம்:

இன்றைய ஆந்திரா என்பது மொழியால் பொதுவானது என்றாலும் மூன்று பிரிவானது, ராயலசீமா எனப்படும் பழைய மதராஸ் மாநிலத்தில் இருந்த தென் மாவட்டங்கள். ஆந்திரா எனப்படும்  கிழக்கு கடற்கரை ஓர மாவட்டங்கள் மற்றும் மத்தியில் இருந்த ஹைதராபாத் அல்லது தெலுங்கனா எனப்படும் பழைய ஹைதராபாத் மாநிலம். 

இதில் ஹைதராபாத் மாநிலம் என்பது சுதந்திரத்திற்கு பின்னரும் தனி நாடாக இருந்தது. அதன் மன்னன் ஒஸ்மான் அலி கான். அதற்கென தனி சட்டம், மொழி (ஆமாம் உருது! இன்றும் இது அதிக மக்களால் பேசப்படுவது), ராணுவம், நாணயம், ரெயில்வே, போஸ்டல் ஸ்டாம்ப் என இருந்தன. 1948 ம் வருடம் செப்டம்பர் 17 அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் திரு. வல்லபாய் பட்டேல் அவர்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த அரசர் துருக்கி நாட்டுக்கு தப்பி ஓடினார்.

ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு இறப்பு :

பிரச்சனை இந்த மனிதரின் இறப்பில் இருந்து ஆரம்பம் ஆகிறது. 1952 அக்டோபர் மாதம் ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு, ஆந்திர ராஷ்டிர என்ற மொழிவாரி மாநிலம் கோரி 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். இதற்கு பின்னர் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அப்போதைய மத்திய அரசு 1953 அக்டோபர் 1 அன்று இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரதேசை உருவாக்கியது. இதன் தலை நகராக கர்னூல் இருந்தது. ஆனாலும் தெலுங்கானா பகுதி இணையாமல் இருந்தது. பின்னர் மத்திய அரசால் தொடங்கப்பட்ட மாநில மறு சீராய்வு கமிட்டி-ன் பரிந்துரைப்படியும், தெலுங்கானா தலைவர்கள் மற்றும் ஆந்திரா தலைவர்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி தெலுங்கானா பகுதி ஆந்திரா மாநிலத்துடன் இணைந்தது.

நீதிபதியின் கருத்து  மற்றும் ஒப்பந்தம்:

அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பாசல் அலி அவர்கள் தெலுங்கானா தனியாக இருக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பினால் மற்றும் சட்டசபையின் 3ல் 2பங்கு ஆதரவுடன் ஆந்திராவுடன் இணையலாம் எனவும் இணைப்புக்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக தன்னுடைய கருத்துக்களை கூறினார்:

ஆதரவான கருத்துக்கள்:
1.  ஆந்திர பகுதி, ஹைதராபாத் பகுதியின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை உபயோகப்படுதுவதன் மூலம் அதன் தலை நகர (கர்நூல்) பிரச்சனைக்கு தீர்வு காணலாம்
2. கனிம மற்றும் வேளாண் வளங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் சீரான வளர்ச்சி காணலாம்.
எதிர் கருத்துக்கள்:
1. வளர்ச்சியில் சரி சமம் இல்லா பகுதிகளை இணைப்பது கூடாது 
2. ஆந்திரா பற்றாக்குறை நிதியிலும், ஹைதராபாத் மிகுதி நிதியிலும் உள்ளவை. இந்த பகுதிகளை இணைப்பது ஆபத்தானது 
3. தெலுகு ஆட்சி மொழி ஆவதன் மூலம் தெலுங்கானா மக்கள் பாதிப்படைவர். * அங்கு பலகாலமாக உருது ஆட்சி மொழி
4. தெலுங்கானா மலை சார் பகுதி ஆனால் ஆந்திரா சம தள பகுதி, எனவே தண்ணீர் பங்கீடு பிரச்சனை வர வாய்ப்புள்ளது 

இரு பகுதிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த சரத்துக்கள் கீழே :

1. ஒரு பகுதியை சார்ந்தவர் முதலமைச்சர் பதவியில் இருந்தால் மற்றொரு பகுதியை சேர்ந்தவர் துணை முதல்வர் ஆக வேண்டும் மற்றும் முக்கிய துறைகளில் ஏதேனும் இரண்டு தெலுங்கானா பகுதிக்கு ஒதுக்கப்படவேண்டும்.(சஞ்சீவ ரெட்டி காலத்தில் துணை முதல்வர் பதவி ஒழிக்கப்பட்டது)
2. மது விலக்கு ஆந்திரா பகுதிக்கு மட்டும். (தெலுங்கானாவில் மது விற்ற பணம் ஆந்திராவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது)
3. நிர்வாக செலவுகள் 2:1 (ஆந்திரா : தெலுங்கானா) என்ற அளவில் பிரிப்பு ( ஆந்திரா தெலுங்கானா பணத்தை உபயோகித்தது)
4. வேலைவாய்ப்பு - மக்கள் தொகை அடிப்படையில்
5. தெலுங்கானா பகுதியில் 12 வருடங்களுக்கு மேல் வசிப்பவருக்கே வேலை  (இது பின்பு 4 வருடம் என ஆனது )
6. ஆந்திரா பகுதி மக்கள் தெலுங்கானா பகுதியில் விவசாய நிலங்களை வாங்க முடியாது 

இந்த ஒப்பந்தத்தின் நிலைமையை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

முதல் போராட்டம் :

1969 ம் ஆண்டு தெலுங்கானா பகுதி மாணவர்கள் மொழிப்பிரச்சனை மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களுக்காக போராட்டம் நடத்தினர். ஒஸ்மானியா பல்கலைக்கழகம் போராட்ட களமாக இருந்தது.  மர்ரி சன்னா ரெட்டி தலைமை தாங்கி நடத்தினார். "ஜெய் தெலுங்கானா" என்று முழங்கிய இவர், இந்திரா காந்தியின் அரசியலில் சிக்கி தன்னுடைய தெலுங்கானா பிரஜா சமிதி கட்சியை காங்கிரசுடன் இணைத்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டார். ஆனால் இந்த போராட்டத்தில் உயிரழந்த மாணவர்களின் எண்ணிக்கை 350க்கு மேல் இருக்கும். இவருக்கு அடுத்து தெலுங்கானா பகுதியை சேர்ந்த நரசிம்ம ராவ் (சிரிக்காத பிரதமர் தான்) அவர்களும் முதலமைச்சர் ஆக்கப்பட்டு போராட்ட வேகம் தணிக்கப்பட்டது. இது மறுபடியும் அரசியலாக்கப்பட்டது 90 களில் தான்.

சந்திரசேகர ராவ்:
தற்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான இவரே அடுத்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர். ஆனால் இந்த முறை தன்னுடைய சுய லாபத்துக்காக. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த இவர், 1999 ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த இவருக்கு துணை சபா நாயகர் பதவி கிடைத்தது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர் 2001ல் அந்த கட்சியை விட்டு வெளியேறி ஆரம்பித்ததுதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி. தனி மாநில கொள்கைக்கு வித்தியாசமாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு தெரிவிக்க கம்யூனிஸ்ட் மற்றும் தெலுங்கு தேசம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் சந்திர சேகர ராவ் தொடக்கி வைத்த உண்ணா விரத போராட்டங்கள், மாணவர்களின் தொடர்ச்சிப்போராட்டங்கள் மற்றும் சில தற்கொலைகளின் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்த தெலுங்கானா மாநிலம் தற்போது வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆந்திரா பகுதியினர் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து கொண்டுதான் இருக்கின்றனர். ஏனென்றால் ஹைதராபாத் நகரமே தெலுங்கானா பகுதியில் தான் உள்ளது. தெலுங்கானாவுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் ஹைதராபாத் பொதுவான தலை நகராக அடுத்த 10 வருடங்க்களுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

காரணங்கள்:
 இந்த பிரிவினைக்கான காரணங்கள் என பார்த்தால் முதலாவது சுதந்திரதிற்கு முன்னும் பின்னும் தெலுங்கானா மக்கள் சுதந்திரமாக இருந்தனர் ஆனால் நில பிரபுக்களிடம் அடிமையாக இருந்தனர். இணைப்பிற்கு பிறகு சுதந்திரம் என்ற பெயரில்  அவர்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.


இணைப்புக்கு பின்னர் தெலுங்கானா பகுதியில் போதுமான தொழில் கட்டமைப்பு இல்லாதது, போதிய வேலை வாய்ப்பின்மை மற்றும் இரண்டு பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என கவனிகாப்படாத பிரச்சனைகள் ஏராளம். ஆனால் இந்த காரணங்களுக்காக மாநிலத்தை பிரிப்பது என்பது எந்த விதத்திலும் தீர்வாகாது. பிரிப்பதனால் மட்டும் தெலுங்கானா பிரச்சனைகள் தீர்ந்து விடாது, ஏனெனில் இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக ஓட்டு வாங்க மட்டுமே பிரிக்கப்படுகிறது. இதற்கு ஒரே மாற்று சிறந்த நிர்வாகம் மற்றும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி மட்டுமே.    

முடிவு:
அரசின் இந்த பிரிவினை முடிவை தொடர்ந்து பல விவாதங்களுக்கு இட்டுச்செல்லும். மேலும் தனி மாநிலம் கேட்கும் மற்ற பிரிவினைவாதிகளுக்கு, இது முன்னுதாரணமாக மேற்கோள் காட்டப்படும்.

தற்பொழுது பிரிக்க காத்திருக்கும் மாநிலங்கள்:

போடோலாந்து   - அசாம்
bundelkand (தமிழாக்கம் தவறான அர்த்தத்தை கொடுக்கிறது) - உத்தர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேஷ்
போஜ்பூர் - உத்தர பிரதேஷ் மற்றும் பீகார்
கூர்க் - கர்நாடகம்
கோர்க்காலாந்து - மேற்கு வங்காளம்
மரத்வாடா மற்றும் விதர்பா - மகாராஷ்டிரம்
மிதிலாஞ்சல்  - பீகார்

நம் நாடு பல கலாச்சார மற்றும் பல மொழி சமூகத்தின் மூலம் பிரபலமானது.  மாநிலங்களை பிரிப்பது என்பது மாநிலம் சார்ந்த வேறுபாட்டை அதிகப்படுத்தும். மேலும் மாநிலம் சார்ந்த அடையாளம் என்பது தேசிய அடையாளத்தை அழித்து விடும்.

போதிய நிதிகளை பின்தங்கிய பகுதிகளுக்கு ஒதுக்கி வளங்களை சமமாக பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்று பட்ட வளர்ச்சியினை நாடு அல்லது மாநிலங்கள் அடையலாம். ஆனால் பிரிவினைக்கு பின்பான இத்தகைய செயல்கள் எந்த விதத்திலும் ஒற்றுமைக்கு உதவாது. 

ஏற்கனவே அண்டை நாடுகள் நம் நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டி வருகிறது. மேலும் உலக பொருளாதார மயமாக்களில் மற்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலையில், நாம் நாட்டின் உள்ளேயே எல்லைக்கோடுகளை அதிகப்படுத்தி கொண்டிருந்தால், இந்த பிரிவினைகள் நம்மை பின்னோக்கி கொண்டு செல்லும்.  நாட்டின் வளர்ச்சி என்பது ஒன்று பட்ட மக்களால் மட்டுமே முடியம்.

Monday, July 29, 2013

சாப்பாடு



கடந்த ஒரு மாத காலமாக சாப்பாட்டு பிரச்சனை சாதாரண மக்களை விட மத்திய, மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் விடாமல் துரத்துகின்றது. இது எதோ அவர்களுக்கு சோறு கிடைக்காத பிரச்சனை என நினைக்க வேண்டாம். கொழுத்து கிடக்கும் பன்றிகள் போல அவர்கள் சேற்றில் படுத்துக்கொண்டு பேசும் பேச்சுக்கள் தான் பிரச்சனை. 

முதலாவது உணவு பாதுகாப்பு சட்டம், இதை மிக துரிதமாக செயல்பாட்டுக்கு கொண்டுவர பார்க்கிறது மத்திய அரசு. இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல, ஏற்கனவே தமிழகம் மற்றும் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதை நாடு முழுக்க உள்ள மக்களுக்கான பொதுவான திட்டமாக கொண்டு வர போகிறார்கள். இதன் மூலம் 5kg அரிசி ரூ.3, 5kg கோதுமை ரூ.2 மற்றும் 5kg இதர தானியங்கள் ரூ.1 க்கும் மக்களுக்கு விநியோகிக்க போகிறார்களாம். இதற்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை மற்றும் உரம், போக்குவரத்து மற்றும் சேமிப்புக்கு என வருடத்திற்கு ரூ.1,25,000 கோடி செலவு செய்யப்போகிறது அரசு. 

இதில் உள்ள நிறைகளை விட குறைகள் அதிகம். அதாவது, நாம் கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம் ஆனால் இவற்றை சேமித்து வைக்க போதிய அளவு கிடங்குகள் இந்தியா உணவு கழகத்திடம்(FCI) இல்லை. அதே போல 45.5 மில்லியன் டன் தானியங்கள்(அரிசி, கோதுமை) கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  இது சரசாரி இருப்பின் அளவை விட மூன்று மடங்கு அதிகம். அவற்றை சேமிக்க வருடத்திற்கு ரூ.15,000 கோடி செலவு செய்யப்படுகிறது. மேலும் போக்குவரத்தின் போது சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள தானியங்கள் விரயமாக்கப்படுகின்றன. ஆனால் FCI ஊழியர்களின் சம்பளம் வருடத்திற்கு ரூ.850 கோடி. இந்த முரண்பாடு எல்லா அரசு துறைகளுக்கும் பொதுவான ஒன்று. உள்-கட்டமைப்பை சரி செய்து விவசாயிகளுக்கான குறைந்தபட்ச விலையை அதிகப்படுதினாலே போதும், அதை விடுத்து இவ்வளவு பணம் வருடா வருடம் செலவிட்டால் மற்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறையும், வரவு-செலவு திட்டத்தில்  பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்தும்.

அரசு  முதலில் சேமிப்பு கிடங்குகளையும், போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்தி, சேமிப்பில் தேவைக்கு அதிகமாக உள்ளவற்றை பொது விநியோகத்தின் கீழ் கொண்டுவரலாம். ஆனால் இவர்கள் காட்டும் முனைப்பு இந்த திட்டத்தின் ஆதாயத்தை கருத்தில் கொண்டே. அதாவது JnNURM மற்றும் MGNREG திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என கண் கூடாக பார்க்கலாம். எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குறைவான கூலி கொடுத்து நீரே வராத பள்ளத்தை தோண்டிய கதைகள் நடந்தன. இதைப்பற்றி தனி பதிவே போடலாம். ஆனால் அடுத்த பிரதமர் ராகுல் அவர்கள் சுதந்திர இந்தியாவின் மிக சிறந்த திட்டம் இது என, அவருடைய பரம்பரையை கேவலப்படுத்துகிறார்.

இரண்டாவது பீகாரில் சத்துணவு சாப்பிட்ட 23 குழைந்தைகள் இறந்துள்ளனர். பீகாரின் மஷ்ரக் என்ற ஊரில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 89 குழைந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து 23 குழைந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு காரணம் உணவில் கலந்திருந்த நச்சுப் பொருளே (வேளாண் பூச்சி கொல்லி) ஆகும். இந்த ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் முன்பே குழைந்தைகள் உணவு சரியில்லை என .தெரிவித்து உள்ளனர். இந்த பள்ளியில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் தலைமை ஆசிரியையின் வீட்டில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் கணவரின் கடையில் இருந்து தான் உணவு எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் வாந்தி மற்றும் மயக்கம் அடைந்துள்ளனர். ஆனால் பள்ளி ஆட்கள் இதை மறைக்கும் பொருட்டு குழைந்தைகளை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். மீதம் இருந்தவர்கள் அருகில் இருந்த சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எப்படியோ ஒரு ஆசிரியரின் அலட்சியம் மற்றும் பணத்தாசையினால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன. 

பீகாரின் மனித வள அமைச்சர் "73000 பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல் படுத்துவது என்பது மிக கடினமான காரியம், இதில் ஈடுபட்டுள்ளோர் ஊழல் செய்வதை நோக்கமாக கொண்டு, உணவின் தரம் மற்றும் அளவில் அக்கறை காட்டுவதில்லை. மேலும் 73000 பள்ளிகளில் குழந்தைகள் உண்பதற்கு முன்பு சோதனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது" என கூறியுள்ளார்.  மேலும் இது மத்திய அரசின் திட்டம் மாநில அரசு எந்த விதத்திலும் பொறுப்பாகாது என தெரிவித்துள்ளார். 

இப்பொழுது தலைமை ஆசிரியை மற்றும் அவரது கணவரின் மீது மட்டும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கை உணர்த்துவது வழக்கம் போல அரசோ, அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ இதற்கு பொறுப்பல்ல. குழந்தைகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.2,00,000 வழங்கப்பட்டு, அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி உள்ளனர். 

ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கு தண்டனையாக "அஞ்சாதே" வில்லனுக்கு இறுதியில் கொடுக்கப்படும் தண்டனையை தரலாம்.

மூன்றாவது மத்திய திட்டக்குழு நகரத்தில் ரூ.32 மற்றும் கிராமத்தில் ரூ.27 செலவு செய்ய முடிந்தால் அவர் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர் என் கூறியுள்ளனர். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை இப்பொழுது 15% குறைந்துள்ளது, அதாவது கடந்த 7 வருடங்களில் 37% இருந்த எண்ணிக்கை 22% ஆக குறைந்துள்ளது.  

அரசு இதற்கென ஒரு கமிட்டியை நியமித்து வறுமை கோட்டுக்கான கோட்டை வரைந்துள்ளனர். அதாவது ஒரு மனிதன் நகரத்தில் உயிர் வாழ ரூ.32 மட்டும் போதுமானது, அதுவே கிராமம் என்றால் ரூ.27 மட்டும் போதுமாம். இதை சொல்ல எதற்கு கமிட்டி, திட்டக்குழு மற்றும் அதிகாரிகள். பொது மக்களிடம் கேட்டுப்பார்த்தால் சொல்லிவிட போகிறார்கள். 

திரு. மண்டேக் சிங்க் அலுவாலியாவிடம் அவர் உபயோகிக்கும் பேனாவின் விலை என்ன என கேட்டு தெரிந்து கொண்டு பின்பு இந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடட்டும். இந்த அறிக்கையை தயாரிக்க ஆன செலவே கோடிகளில் வரும். இதை போன்ற அறிக்கை, ஆராய்சிகளை விட்டு விட்டு மக்களுக்கு உருப்படியான காரியங்களில் ஈடுபடலாம். இப்பொழுதே இப்படி என்றால் இன்னும் அந்த கோமாளி பிரதமரானால், நாமெல்லாம் அகதிகளாக போக வேண்டியதுதான்.

அலுவாலியா மற்றும் அவரது அல்லக்கைகளுக்கு 37 இல்லை 50 ரூபாய் கொடுத்து ஒரு முழு நாளை டெல்லி அல்லது மும்பையில் கழிக்க சொல்லவேண்டும். அப்பொழுது தான் தெரியும் சாப்பிடாததால் அடுத்த நாள் காலை கழிப்பறைக்கு சென்றால் ஆய் கூட வராது என்று.

நான்காவது மூன்று மத்திய அமைச்சர்கள் தங்களால் ரூ.12 க்கு ஒரு வேளை உணவு சாப்பிட முடியும் என தெரிவித்துள்ளனர். முதலில் திரு. ராஜ் பப்பர் அவர்கள் "உணவு பொருட்கள் விலை குறைந்துள்ள காரணத்தினால், மும்பை நகரத்தில் மதிய உணவுக்கு ரூ.12 மட்டுமே போதுமானது, அதுவும் காய் கறிகளுடன் ஒருவர் முழு சாப்பாடு சாப்பிடலாம்." என கூறினார். இவர் காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நன்றி விசுவாசத்தை காட்ட தன் தலைமைக்கு வாலை இப்படி ஆட்டி தெரியப்படுத்தி உள்ளார். 

இவரின் பேச்சை கேட்டு கோபப்பட்ட இன்னொரு காங்கிரஸ் தலைவரான ரஷித் மசூத் "எனக்கு மும்பையை பற்றி தெரியாது, ஆனால் டெல்லியில் வெறும் 5 ரூபாய்க்கு ஒருவர் ஒரு வேளை உணவு சாப்பிடலாம்" என கூறி தன் வாலை அவரை விட வேகமாக ஆட்டி தன் விசுவாசத்தை காட்டியுள்ளார்.

அஸ்ஸாமின் வேளாண் மற்றும் உணவு விநியோக அமைச்சர் "ஒருவர் 2.50 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு சாப்பிடலாம். 8 பேருக்கு ஒரு வேளை உணவுக்கு 20 ரூபாய் போதுமானது" என கனைத்துள்ளார். மேலும் இதை நிரூபிக்கவும் தயார் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுகளால் மனம் நொந்த UPA கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் அமைச்சருமான பாரூக் அப்துல்லா இதென்ன பிரமாதம் "ஒருவன் ஒரு ரூபாய்க்கே சாப்பிட முடியும்" என தன் இருப்பை  ஒரு காலை தூக்கி காண்பிதுள்ளார்.

இந்த பன்றிகளுக்கு மக்கள் எல்லோரும் மடையர்கள், நாட்டில் பாலும் தேனும் ஓடுகிறது என்றால் நம்பிகொள்வார்கள் என்ற நினைப்பு. இப்பொழுது பேசி விட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

 இவ்வளவு பேசும் இந்த பன்றிகளின் பட்டியில் மதிய உணவிற்கான விலை பட்டியல் கீழே:

Veg Thali.            - Rs 18 (4 chapati, rice, dal, dahi, veg, salad, papad)
Chicken Biryani. - Rs 51 per plate
Chicken Masala.  - Rs 37 per plate
Paneer Masala     - Rs 20 per plate
Roti.                    - Re 1 each
Rice                    - Rs 6 per plate
Vegetables          - Rs 6 per plate
Dal                     - Rs 2 per  plate

இவர்களுக்கு தங்கள் கட்சியிடம் விசுவாசத்தை காட்ட வேண்டும் என்றால் அவர்களின் தலைமையின் முன்பு மண்டியிட்டு நிரூபிக்கலாம்.

Tuesday, July 16, 2013

கடவுள் - மாற்று கருத்து

 கடவுள்


உத்தரகாண்டில் 

கடவுள் இருக்கிறார்
உயிர் பிழைத்த குடும்பத்தினருக்கு

கடவுள் இல்லை
உயிரிழந்த குடும்பத்தினருக்கு

Photo courtesy: post.jagran.com

Saturday, July 13, 2013

Whistle-blower


எட்வர்ட் ஸ்நோவ்டன் இப்போது அமெரிக்காவின் CIA-வினால் துரத்தப்படும் மிக முக்கிய குற்றவாளி. இவர் செய்த குற்றம் உலகின் மிக ரகசிய அமைப்புகளில் ஒன்றான NSA எனும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் செய்த அம்பலங்களை வெளிப்படுத்தியுள்ளார். 

 அமெரிக்க குடிமகனான இவருக்கு வயது 30, இவர் தொழில்நுட்ப உதவியாளராக CIA எனும் அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்திலும், ஒப்பந்தப்பணியாலராக தேசிய பாதுகாப்பு நிறுவனம் எனப்படும் NSA-விலும்  பணியாற்றியுள்ளார். அவ்வாறு பணியாற்றிய போது PRISM எனும் உலகளாவிய கண்காணிப்பு திட்டம் மற்றும் Tempora எனும் பிரிட்டனின்  கண்காணிப்பு திட்டம் ஆகியவற்றின் மூலம்  அமெரிக்கா செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

அப்படி அந்த PRISM திட்டத்தில் என்னவெல்லாம் கண்காணித்துள்ளனர் எனப்பார்த்தால்:
  • இ-மெயில் 
  • பதிவேற்றப்படும் போட்டோ, வீடியோ மற்றும் கோப்புகள்.
  • சமூக வலைத்தளங்கள் 
  • ஆடியோ / வீடியோ conference 
  • VoIP 
என இணையத்தில் அதிகம் உபயோகப்படுத்தும் எல்லாவற்றையும் கண்காணித்துள்ளனர். அதற்கான காரணம் கொள்கை, தீவிரவாத பயம் மற்றும் அதிகாமான தளங்கள் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்குவது தான். அதிலும் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகிள் மற்றும் ஸ்கைப் என முன்னணி நிறுவனங்களே தங்கள் பயனாளர்களின் தகவல்களை NSA-வுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இது எந்த அளவுக்கு நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என நாம் நினைக்கலாம். என்னுடைய இ-மெயில்களில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடையாது எனவும், சமூக வலைத்தளங்களில் வெறும் like போடுவது தான் என் வேலை எனவும் நீங்கள் நினைத்தால் நாம் மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் என எளிதாக அறியப்படலாம்.  இத்தகைய உரிமை மீறல்கள்கலை மேற்க்கத்திய நாட்டவர்கள் அவ்வளவு எளிதாக விட்டு விடுவதில்லை. ஏனெனில் இது உங்கள் வீட்டில் உங்களுக்கு தெரியாமல் ஒரு கேமரா பொருத்தி உங்களுடைய நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ஒப்பானது. எல்லா தளங்களின் தனியுரிமை கொள்கையை (அதாங்க privacy policy) படித்துப்பாருங்கள், அதில் தெளிவாக சொல்லியிருப்பார்கள் உங்களுடைய தகவல்கள் பாதுகாப்பானவை மற்றும் எந்த  ஒரு மூன்றாம் நபருக்கு (third  party) கொடுக்கப்படமாட்டாது என (இந்த விஷயத்தில் நம்ம ஊர் செல் போன் நிறுவனங்களே நம்மை செமத்தியாக ஏமாற்றுகின்றன, இதில் அமெரிக்காவுடன் எங்கே போய் சண்டை போட). 

இத்தகைய கண்காணிப்பை அல்லது அத்துமீறலைத்தான் ஸ்நோவ்டன் அம்பலபடுதினார். அமெரிக்காவின் குடிமகன் என்ற முறையில் அவர் செய்தது தவறுதான் என்றாலும், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்ற வகையில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறிய பின் விடுத்த அறிக்கை "என்னுடைய நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்களை எல்லாம் கண்காணிக்கும் உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை" .
அமெரிக்காவில் இருந்து வெளியேறி ஹாங்காகில் தங்கினார். அங்கு அடைக்கலம் தர சீன அரசு மறுத்தால் ரஷ்ய சென்று அதன் நாட்டின் விமான நிலைய ஹோட்டலிலேயே இன்னமும் தங்கியுள்ளார். ஆனால் அமெரிக்கா அவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்க கோரியுள்ளது. இவற்றிற்க்கு இடையில் அவர் இருபது நாடுகளிடம் அடைக்கலம் வேண்டி விண்ணப்பித்து இருந்தார்.  அவற்றில் நம் நாடும் ஒன்று. இந்த செய்தி எட்டிய உடனே நமது மாண்புமிகு அமைச்சர் சல்மான் குர்ஷித் "இந்தியா ஒன்றும் திறந்த வீடல்ல அடைக்கலம் கொடுக்க" என்று அவருக்கு உடனே பதிலடி கொடுத்துள்ளார். அந்தப்பதருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை NSA-வால் அதிகம்   கண்காணிப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று (மற்றவை பாகிஸ்தான், ஈரான் மற்றும் இஸ்ரேல்) .

அதிகம்  கண்காணிப்படாத தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளே இதை எதிர்த்து முதல் குரல் கொடுத்துள்ளன. இந்தியா இன்னமும் வாயை திறக்கவில்லை.  ஈகுவடோர் எனும் சிறிய நாடு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்ததோடு ஸ்நோவ்டனுக்கு அடைக்கலம் அளிக்கவும் முயற்சி செய்கிறது. 

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு (Privacy  & Security) என்பது இணைய பயன்பாட்டில் மிக முக்கியமானது. இவை இரண்டுமே இப்பொழுது மீறப்பட்டுள்ளது. 

Famous quote  of Mr.Benjamin Franklin "Those who would give up essential liberty to purchase a little temporary safety, deserve neither liberty nor safety"

குறிப்பு :

Whistle-blower இதற்கான சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை?

Wednesday, July 10, 2013

ராணுவ வீரன்


என் பெயர் சந்துரு. எனக்கு வயது 32. நான் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாயக். நான் ராணுவத்தில் சேர்ந்ததே ஏதேனும் போரில் பங்கேற்று ஒரு (பரம்) வீர் சக்ரா விருது பெற்று என்னுடைய நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே. ஆனால் இப்பொழுது நான் பணிபுரிந்து கொண்டிருப்பது HAL நிறுவனத்தின் பாதுகாப்பு பணியில், இல்லை உண்மையை ஒத்துக்கொள்கிறேன் HAL ஏர்போர்ட்டின் கேட்டில் செக்யூரிட்டி பணி.

தயவுசெய்து என் பணியை சாதரணமாக எடுதுக்கொள்ளவேண்டாம், இங்கே தற்பொழுது முழு உற்பத்தி நிலையை எட்டியுள்ள TEJAS என்ற நமது சுய தயாரிப்பு போர் விமானங்கள் உற்பத்திக்கு பிந்தைய பரிசோதனைக்கு இங்குதான் ஈடுபடுத்தப்படுகின்றன. தீவிரவாதிகளின் இலக்கில் இருப்பதால் இவைகளை பாதுகாக்கும் பணியில் எங்கள் பட்டாலியன் ஈடுபட்டு வருகின்றது. இந்த அளவிற்கான சுய விவரம் போதுமே.

ஒரு சாதாரண நாளின் போக்குவரத்து இல்லாத மாலை வேலையில் நானும் என்னுடன் மற்ற நாயக்-களான ரன்பீர், அகுஜா மற்றும் ஜாபரும் பணியிலிருந்தோம். சூரியன் தொலைதூரத்தில் இருந்த கட்டிடங்களுக்கு பின்னணியில் மறைந்து கொண்டிருந்தது. சுவராஸ்யமான பேச்சுக்கிடையில் ஒரு வேன் மெதுவாக சாலையில் சென்றதை பார்த்தோம். இனி காலை வரை அரை மணி நேர இடைவெளியில் நங்கள் இருவர் இருவராக இன்னொரு முனை வரை சென்று சோதனையில் ஈடுபடவேண்டும். முதல் முறை சோதனைக்கு அகுஜாவும் ஜாபரும் சென்றனர். அடுத்த  முறை நானும் ரன்பீரும் சென்றோம். அப்பொழுது சுற்று சுவருக்கு வெளியே ஆட்கள் பேசிக்கொள்வது மெதுவாக கேட்டது. ஏர்போர்ட்-ஐ ஒட்டியுள்ள பகுதி வனாந்தரம், எனவே யாரும் வர வாய்ப்பில்லை, இருந்தும் ரண்பீர் கட்டிடத்தின் மறு முனையின் ஓரத்தில் உள்ள வாட்ச் டவர்க்கு சென்று கண்காணிப்பதாக கூறி சென்றார். நான் வெறுமனே அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன்.  அவர் சென்ற ஐந்தாவது நிமிடம் அங்கிருந்து சைகை செய்தார் மூன்று பேர் வெளிப்பக்கமாக இருப்பதாக. நான் இதை கேட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விசாரிக்க சொல்வதாக கூறி சென்றேன். 

நான் அகுஜாவிடம் இதை சொல்ல அவர் உடனே உட்பக்கத்தில் இருந்த எங்கள் ஹவில்தாரிடம் இத்தகவலை சொல்லி வெளியில் சென்று விசாரிக்க உத்தரவு கேட்க. அவரோ வெளியில் பொதுமக்களாக இருக்கும் எனவே என்னை போக சொல்லியிருக்கிறார். இப்படி அவமானப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல, எனவே என்னையே நொந்துகொண்டு நடந்தேன்.  என்னை வீரன் என நீருபிக்கும் சந்தர்ப்பமாக இது அமைய வேண்டும் எனவே  அவர்கள் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டேன். வேண்டுதல் முடியும்போது அவர்களை நெருங்கிவிட்டேன். அவர்கள் பார்க்க சாதாரணமானவர்களாக தெரிந்தனர். விசாரித்ததில் எலி, முயல் பிடிப்பவர்கள் என்று சொல்ல என்னை எவ்வளவு சரியாக என் மேலதிகாரி கணித்துள்ளார் என தெரிந்தது. அவர்களை போக சொல்லிவிட்டு இதை ரன்பீரிடம் உரக்கச்சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன். 

வெறுப்பில் திரும்பி நடக்கும்போது கேட்டின் அருகில் ஒரு வேன்  நின்றிருந்தது. அதன் இடது பக்கமாக ஒரு ஆள் நின்று அகுஜாவுடன் பேசிக்கொண்டிருந்தான். வேனின் வலது பக்க கதவு திறந்ததில் ஒருவன் கையில் ரைபிள் தெரிந்தது. உடனே சுதாரித்து சுற்று சுவற்றின் ஓரமாக பதுங்கினேன். அதற்குள் வெளியில் இருந்தவன் தன் பிஸ்டலை எடுக்க அகுஜா சரியாக அவன் நெற்றியில் சுட்டுவிட்டு உள்புறமாக ஓடினார். கண்டிப்பாக அவர்கள் பாதுகாப்பு தடுப்பினுள் இருந்து தாக்குவார்கள். வேனின் உள்ளே இருந்தவர்களும் சுதாரித்து உட்புறமாக சுட்டுக்கொண்டே இறங்கினர். அவர்கள் மொத்தம் ஐவர். நானும் என் ரைபிளை பின்புறமாக போட்டுக்கொண்டு பிஸ்டலை எடுத்தேன், ஏனெனில் அருகில் இருந்து சுட இதுதான் சரி. இதற்குள் அவர்கள் சுட்டுக்கொண்டே உள்பக்கமாக சென்றனர். இவர்களை உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுவரோரமாக முன்னேறினேன். உள்புற சுவற்றின் ஓராமாக ரன்பீர் சுடப்பட்டு கதறும் சத்தம் என்னை உசுப்பியது, வேகமாக முன்னேறினேன். கேட்டின் அருகில் நான்கு தீவிரவாதிகளின் உடல் கிடந்தது, அதில் ஒருவன் மட்டும் உயிருடன் முனகிக்கொண்டு இருந்தான். பாதுகாப்பு வளையத்தினை அணுகி பார்த்தேன் சிறிது நேரம் முன்பு சிரித்து பேசிய நண்பர்கள் இருவரும் உயிருடன் இல்லை, நான்கு பேரை சுட்டுக்கொன்று அவர்களும் உயிரை விட்டிருந்தனர். ரன்பீரை இங்கிருந்தே தேடினேன் அவர் காயம் பட்டு நடக்க முடியாமல் சுவரோரம் சாய்ந்து இருந்தார். ஒருவன் மட்டும் உட்பக்கமாக சென்றுள்ளான், ஆனால் அவன் இன்னும் இரண்டடுக்கு பாதுகாப்பை தாண்டித்தான் செல்லவேண்டும். எனவே என்னுடைய தலைமை அதிகாரியை தொடர்பு கொண்டேன், அவர் நாங்கள் அவனை தேடுகின்றோம் நீ கேட்டை மூடிவிட்டு அங்கேயே காவலிருக்க சொன்னார்.

நான் துரிதமாக வெளியில் காயம்பட்டு கிடந்த ஒருவனை உள்ளே இழுத்துக்கொண்டு வந்தேன், ஏனெனில் இவனிடம் இருந்து எல்லா தகவலும் கிடைக்கக்கூடும். கேபினின் உள்புறமாக படுக்கவைத்து முதலுதவி செய்தேன். பின்னர் அவன் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு விட்டு, ரன்பீரை கவனிக்க சென்றேன். அதற்குள்ளாக விமான நிலையத்தின் உள் பக்கமாக துப்பாக்கி சத்தங்கள் கேட்டன.  ரன்பீர் அதிக ரத்தம் சென்றதால் மயக்கத்தில் இருந்தார். அவரை தோளில் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக  கேபினிற்க்கு கொண்டு சென்று முதலுதவி செய்தேன். உள்பக்கம் இன்னமும்துப்பாக்கி சத்தம் கேட்டது. ஒரு வேலை இன்னும் அதிகம் பேர் ஊடுருவி உள்ளனரோ. நான் பதுங்கி பதுங்கி விமான ஹேங்கர்கள் பக்கம் செல்லலாமென நினைத்தபோது, ஒருவன் வாட்ச் டவர் பக்கம் நொண்டிக்கொண்டு ஓடுவது தெரிந்தது. அவன் கண்டிப்பாக கேட் பக்கமாக ஓடுவான் என உணர்ந்து, நானும் அந்தப்பக்கமாக பதுங்கியபடி சென்றேன்.  அருகே நெருங்க நெருங்க அவன் ஆயுதம் இல்லாமல் இடது கையில் மற்றும் இடது காலில் தோட்டா வாங்கியிருந்ததை தூரத்தில் இருந்தே உணர முடிந்தது. கண்டிப்பாக அவனின் காயங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து விடுவான், ஏனெனில் நிறைய ரத்தம் இழந்திருப்பான். என்னுடைய எண்ணப்படி உள்ளே இன்னமும் இவனை தேடிக்கொண்டிருப்பார்கள், இவன் காயம் பட்டதால் தப்பித்து வந்துள்ளான். வேனை குறி வைத்து அவன் ஆயுதமின்றி ஓடுவதால், நான் தைரியமாக அவனை நோக்கி கேட் பக்கமாக சென்றேன்.

அதற்குள்ளாக அவன் வேனில் ஏறி விட்டான், அதை ஸ்டார்ட் செய்யும் முன்பாக அவனருகில் சென்று துப்பாக்கியை அவன் தலைக்கு குறி பார்த்தேன்.
என்னை கண்டதும் திடுக்கிட்டவன், முயற்சி தோல்வி அடைந்ததால் அப்படியே ஸ்டியரிங்கில் சாய்ந்தான். நான் அவனை துப்பாகி முனையால் தள்ள எத்தனிக்கையில், என்னுடைய தோலை யாரோ பின்பக்கமாக பற்றி உலுக்கினர். நானும் உள் பகுதியின் பாதுகாப்பில் இருந்த யாரோதான் என எண்ணியபடி, அவனை உயிருடன் பிடித்த பெருமையை `பெரும் முனைப்பில் அவனை பிடித்து வெளியில் இழுக்க வேனின் கதவை திறக்கப்போக, திரும்பவும் என் முதுகு உலுக்கப்பட்டது.  நான் மறுபடியும் என்னடைய காரியத்தில் கண்ணாக இருக்க, இப்பொழுது என்னுடைய சட்டையை பிடித்து உலுக்கினர். நான் கோபத்தில் திரும்பி பார்த்தால் இது என்னுடைய ஹவில்தார் இல்லை. இது வேறு முகம் எங்கேயோ அடிக்கடி பார்த்த முகம், சட்டென நினைவு வராமல் விழிக்க. என் முகத்தில் தண்ணீர் தெளிக்க சொன்னார் என்னை பிடித்து உலுக்கியவர். என்னடா இது தீவிரவாதியை பிடிக்கும் நேரத்தில் வந்த சோதனை என்று, மறுபடியும் அவரை நினைவுபடுத்தி பார்த்தேன், அட நம்ம கோவிந்தண்ணன் கூட இது யாரு நம்ம சுந்தர் சார். இவங்க எப்ப ஆர்மில சேர்ந்தாங்க என யோசிக்கும்போது, முகத்தில் தண்ணீர் கொட்டப்பட்டது. 

நான் முகத்தை துடைதுக்கொன்டே, அவரை பார்த்து கத்தினேன். "என்ன சார் இது, நான் கஷ்டப்பட்டு இவனை பிடிச்ச்சா நீங்க என்னமோ என் மேல தண்ணிய ஊத்தறீங்க". இப்பொழுது சுந்தர் சார் என்னிடம் கத்தினார். "யோவ் இன் டைம் போட சொன்னா, நீ இங்க படுத்துக்கிட்டு யார புடுச்சு வெச்சுருக்க. அத நான் வந்து கெடுக்க. இன்னும் எத்தனை மணி நேரம் தூங்குவ, உன்ன எழுப்பி விட இத்தனை பேர் வரணுமா, இங்க பாரு இன் டைம் போட எவ்ளோ பேரு நிக்கறாங்கன்னு. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. இதே பொலப்பா போச்சு உனக்கு, இது தான் கடைசி தடவை. இனி இப்படி ஒரு வாட்டி பண்ணின வீட்ல போயி நல்லா தூங்கிக்க. யாரும் எழுப்ப மாட்டாங்க. என்ன காதுல விழுந்துச்சா" என வரிசையாக வசவுகள் வந்து விழுந்தன. 

மில்லின் கேட்டில் இருப்பது சுரீர் என மண்டைக்கு உரைத்தது. அப்போ இவ்ளோ நேரம் கண்டது கனவா. இப்பொழுது இன் டைம் போட ஒவ்வொருவராக முன்னே வர ஆரம்பித்தனர். இனி தாமதித்தால் அடி விழும் என்று, அடிக்கடி வரும் இந்த கனவை எண்ணிக்கொண்டு வாட்ச்மேன் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

Monday, July 1, 2013

விபத்து அனுபவம் - III

வீட்டுக்கு வந்ததும் ஏதோ சொர்க்கம் சென்றது போன்ற அனுபவம் இருந்தது. ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அவ்வளவு பிரச்சனைகள் இருந்தன அங்கே. வீட்டுக்கு வந்த நான்கு நாட்களில் என் மனைவிக்கு பிரசவ வலி வந்தது, என் மகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே உலகை பார்க்கும் ஆசை போல. மருத்துவமனை சென்ற அடுத்த நாள் என் மகள் பிறந்தாள், இவ்வளவு சோதனைகளுக்கு இடையில் அது மட்டும் மிக சந்தோசமான நாள்.
ஏனென்றால் அவளை நான் பார்க்க சென்றது ஆம்புலன்சில் பின்னர் stretcher-ல் படுத்துக்கொண்டு சென்று பார்த்தேன். இந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு அமையும்?

அதற்கு பிறகு வந்த நாட்கள் மிக கொடுமையானவை, அது நானே தேடிக்கொண்டது. அதாவது வீட்டில் நான் மட்டும் இருந்தேன் (அத்தகைய சூழ்நிலை). காலையில் மட்டும் நண்பர்கள் இருவர் வந்து காலை கடன் கழிக்கவும் உணவு கொடுக்கவும் வருவார்கள் பின்னர் மதிய உணவின் போது ஒருவர் மட்டும் வருவார் நடுவில் நான் எதற்கும் ஆசைபடாமல் படுத்திருக்க வேண்டும். அதுவும் விட்டத்தை பார்த்தபடி, ஏனென்றால் எந்த பக்கமும் திரும்பி படுக்க முடியாது. இரவில் மட்டும் நான்கு அல்லது ஐந்து நண்பர்கள் வருவார்கள், அதில் இருவர் மட்டும் என்னுடன் உறங்குவார்கள். இப்படி கழிந்த ஒரு வாரத்தில், என் மனைவி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார். அப்பொழுது என்னையும் கண்டிப்பாக அங்கே வரச்சொன்னார். நான் அங்கு சென்றால் அவர்களுக்குத்தான் கஷ்டம் ஏனென்றால் குழந்தையையும் என்னையும் கவனிப்பது இயலாத காரியம் என்று நினைத்தேன். ஆனால் அவரின் அன்பு கட்டளைக்கு முன்பாக என் யோசிப்பு தவறானது.

மனைவியின் வீட்டில் இரு மாதம் குழந்தையுடன் நேரம் போனது. அதற்கு நடுவில் மருத்துவமனை சென்று வந்ததில் இரு மாதத்தில் என் கால் உடைந்த எலும்புகள் அதுவே சேர வாய்ப்புண்டு அதுவரை ஓய்வு எடுக்க சொன்னார்கள். இரு மாதம் கழித்து சென்றால் எலும்புகள் சேரவில்லை எனவே காலில் plate வைக்க வேண்டும் உடனே admit ஆக  சொன்னார்கள். சரி கொடுமையே என்று அதற்கான வேலைகளை என் நண்பனை செய்ய சொன்னேன். என்னை என் காலில் உள்ள steel & screw க்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார் என்னை சோதித்த மருத்துவர். அவர் சொன்னார் இவைகளை எடுக்கும் பொழுது கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார். நான் வலி தாங்குவது கஷ்டம் மயக்க ஊசி போட்டு எடுத்து விடுங்கள் என்றேன். அவர் சொன்னார் அதற்கு ரூபாய் 8000 ஆகும், இரண்டு நிமிடம் பொருத்து கொண்டால் கழட்டி விடுவோம் அதற்கு ருபாய் 500 தான் ஆகும் என்றார். அதுவும் சரி 2 நிமிடத்திற்கு 8000 அதிகம் என்று ஒப்புக்கொண்டேன்.

மருத்துவர் அவருடைய உதவியிடம் Casualty ward ல் வைத்து பாருங்கள் என்றார். அதனால் அங்கு கொண்டு சென்றனர். நானும் அவசர பிரிவாயிற்றே சீக்கிரம் அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்தால், அங்கு என்னைத்தவிர யாரும் இல்லை. இருந்த nurse & doctor கள் நான் இருப்பதை பற்றி கவலைபடாமல் உரசி விளையாடி கொண்டிருந்தனர். எரிச்சலில் கண்ணை மூடி படுத்துக்கொண்டேன். பின்னர் அங்கு இல்லை வேறு ஒரு வார்டு என்று அழைத்து சென்றனர். அங்கும் சுமார் இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு ஒரு மருத்துவர் வந்து அவற்றை வலிகளுக்கிடையில் கழற்றினார். பின்னர் இன்னொரு மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்று 5வது மாடிக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது என்னை அழைத்து சென்ற ஒரு வயதான பெண்மணி என்னை lift-ன் முன்பு விட்டுவிட்டு சென்றுவிட்டார். நான் வரியவரிடத்தில் அவ்வளவாக கோபம் கொள்ளாதவன். ஆனால் அன்று வலியில் அவரிடம் ஏன் இங்கே படுக்க வைத்து விட்டு சென்றீர்கள் என்று கேட்க அவரோ ரொம்ப அவசரம்னா மாடி படி இருக்கு நடந்து போங்க என்று சொல்ல கோபம் தலைக்கேறி திட்டிவிட்டேன், இருந்தும் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் கோபப்படதட்கு.

இவையெல்லாம் முடித்தபின்னர் என் நண்பன் என்னிடம் இங்கு அறை ஏதும் கிடையாது என்று சொல்கின்றனர் என்றார். என்னடா இது பிரச்சனை என்பது என் தலை முடிபோல என்னை விட்டு போகாது என்று நினைத்துக்கொண்டு வரவேற்பாளரிடம் கேட்டால் எதோ மாநாடு நடப்பதால் எல்லா அறைகளும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். என்ன இது ஹோட்டல் போல சொல்கிறார்களே  என்று நானும் மருத்துவர் தான் சொன்னார் அவரிடம் நீங்கள் சென்று இதை சொல்லுங்கள் என்றேன். அவரும் சளைக்காமல் யாரிடம் வேண்டுமானால் சொல்லுங்கள் இதுதான் பதில் என்றார்.

  ஒரு வழியாக அறை கிடைக்கும் என்ற உறுதி மொழி தரப்பட்டதால் அரை மணி நேரம் காத்திருத்தலில் முடிந்தது. பின்னர் அவர்கள் முன் பணம் செலுத்த அழைத்தனர். என் நண்பன் சென்ற வேகத்தில் திரும்பி வந்து வாடகை 2100 சொல்கிறார்கள் என்றான். ஒரு மாதத்திற்கு முன்பு 1700 தானே இருந்தது என்றால், மே மாதத்தில் இப்படித்தான் இருக்குமாம். சரி இதுவும் ஊட்டி ஹோட்டல் தொழில் போல என்று எண்ணிக்கொண்டு சரி என்றேன். ஒரு வழியாக மாலையில் அறைக்குள் சென்று படுத்தேன், நாளைய நாட்கள் மோசமாக இருக்கப்போவது தெரியாமல்.

மறு நாள் மட்டும் என் நண்பன் இருந்தான், அதற்கு பின்னர் தனிமை தான். அதிக பொழுதை எடுத்துக்கொண்டது தொலைக்காட்சி பெட்டிதான். தனிமை மிக கொடுமை அதிலும் இயலாமையில் இருக்கும்பொழுது இன்னும் கொடுமை. மதிய உணவு தட்டை சிறிது தள்ளி வைத்து விடுவார்கள். அதை எடுத்து உண்ண மிகவும் சிரமப்பட்டு சாப்பிடாமலே படுத்ததுண்டு.   அறுவை சிகிச்சை 4 நாள் கழித்து என்பதால் பொழுது மிக சிரமத்துடனே கழிந்தது.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு தான் சொன்னார்கள் இடுப்பு எலும்பில் இருந்து சிறிது எடுத்து உடைந்த கால் பகுதியில் வைக்கபோவதாக. எனக்கு அழுகையே வந்து விட்டது. அட ஒரு நொடி தவறியதற்கு இத்தனை காயங்களா என்று. காலை 6 மணிக்கே அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று அடுத்த 6 மணி நேரத்தில் plate பொருத்தப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டேன். எனக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க நிலை ( anesthesia) பிடித்துப்போனது. ஆனால் அதற்குப்பிறகு அனுபவிக்கும் வலி தனி. அந்த அரை மயக்க நிலையில் படுத்துக்கொண்டு இனி சீக்கிரம் நடக்கலாம் என்ற கனவில் இருந்தேன் அறையில் காத்திருக்கும் பிரச்சினையை அறியாமல்.

அறைக்கு வந்து (குடும்ப)பிரச்சினைகளை வலியுடன் சந்தித்து விட்டு சிறிது ஓய்வுடன் கண் சாய முடிந்தது. அடுத்த நாளில் இருந்தே நடை பயிற்ச்சி செய்ய சொல்லி Physiotherapist வந்து விட்டார். அவரிடம் போராடி அடுத்த நாள் செய்வதாக சொன்னேன். அதன்படி அடுத்த நாள் வந்து ஒரு காலை மட்டும் ஊன்றி நொண்டி எடுக்க சொன்னார். நான் நினைத்தது என்னவோ இரண்டு காலில் நடப்போம் என்று, ஆனால் நடந்ததோ வேறு. சரி இனிமேல் தான் நடந்து பழக வேண்டும் போல என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த ஐந்து நாட்களும் இது தான் நடந்தது. தொடர்ச்சியான பயிற்ச்சியின் மூலம் காலில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு கொடுக்கவேண்டிய தண்டத்தை செலுத்தி விட்டு வெளியில் வந்தோம். மறுபடியும் மனைவியின் இல்லத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் நான் மட்டும் டாக்ஸி-ல் தனியாக வர வேண்டி இருந்தது. இங்கு வந்த பின்னர் மறுபடியும் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு பொழுது கழிந்தது. ஒரு பத்து நாட்கள் கழிந்து காலில் உள்ள தையல் பிரிக்க வேண்டி மறுபடியும் மருத்துவ மனை சென்றேன். வலது காலின் இரு பக்கமும் தையல் போடப்படிருந்தது. அதில் வலது பக்கத்தில் மட்டும் சிறிது வலி இருந்தது. அதை மருத்துவரிடம் சொன்னேன், அவரோ அது ஒன்றும் இல்லை பிரித்த பின்னர் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். பிறகு காலில் உள்ள வீக்கம் குறைய ஒரு band ம் போட்டு விட்டனர் (சும்மா இல்ல 250 ரூபாய்).

வீட்டுக்கு வந்ததில் இருந்து  அந்த புண்ணில் சிறிது இரத்தம் வந்து கொண்டு இருந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு கட்டை அவிழ்த்து பார்த்த போது தையல் போட்ட இடம் சரியாக ஒட்டாமல் இருந்தது தெரிந்தது. சரி நாமே வைத்தியம் பார்க்காமல் அங்கேயே சென்று காட்டுவோம் என்று சென்றேன். மருத்துவர் பார்த்துவிட்டு புண் ஆன காரணம் உங்களுக்கு சர்க்கரை இருக்கலாம் என்றார். நான் ஐயா தையல் எடுக்கும்போதே சொன்னேன் அங்கு வலி இருக்கிறதென்று ஆனால் யாரும் அதை கேட்டுக்கொள்ளவில்லை என்று. அவர் சுதாரித்துக்கொண்டு இது சாதரணமாக வருவதுதான் பயப்பட ஒன்றும் இல்லை, மருந்து தருகிறேன் 15 நாட்கள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். இன்னும் ஒரு மாதம் கழித்து x-ray எடுத்து பார்த்தால் எலும்பின் வளர்ச்சி தெரியும் அதன்பின் வலது கால் ஊன்றி நடக்கலாம் என்றார். சரி இனி கடைசி கட்டத்தில் எதற்கு வீண் சண்டை என்ற முடிவில் ஒத்துக்கொண்டு கிளம்பும்போது மருந்து வாங்கலாம் என விலை கேட்டால் 20 மருந்து 1000 ரூபாய் என்றார். தலை சுத்தி விட்டு நின்றது, இனி வாங்கித்தான் ஆக வேண்டிய நிலையில் இருப்பதால் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து விட்டு வந்தேன் (இருந்த பணமே 1000 தான்).

இப்பொழுது வலிகள் குறைந்து கால் ஒரு விதமான வடிவத்திற்கு வந்து விட்டது. சீக்கிரம் நடப்பேன் என்ற நம்பிக்கையில் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

என் நண்பர்கள் வீரா, ஜெய், மோகன், கதிர் மற்றும் வேணு மற்றும் என் மனைவி, என்னுடைய மாமா யுவராஜ் இவர்கள் செய்த உதவிகளுக்கு நான் எப்படி ஈடு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.

பி.கு: இன்று தேசிய மருத்துவர்கள் தினம் (01-07-2013). 

Friday, May 17, 2013

விபத்து அனுபவம் - II


தனியார் மருத்துவமனை:
 
தனியார் மருத்துவமனை சாய்பாபா காலனி-ல் இருந்தது. அது ஒரு பெரிய மருத்துவமனை, எனக்கு அதன் வாசல் எந்த பக்கம்னு கூட தெரியாது. நண்பர்கள் ஆம்புலன்ஸ்-ல் ஏற்றி விட முதல் முறையாக சுழல் விளக்கு போட்ட வாகனத்தில் சென்றேன். ஆனால் இரவு 10.30 மணி என்பதால் எங்கள் வாகனம் மட்டும் சாலையில் சென்றது. மருத்துவமனை சென்றதும் நல்ல இடத்தில் படுக்க வைத்தனர் சுற்றிலும் ஏதோ திரை கட்டி விட்டிருந்தனர். வந்த 5 நிமிடங்களுக்குள் என் ஊரில் இருந்து சொந்தக்காரர்கள் 15 பேர் வந்துவிட்டனர். எல்லோரும் என் கட்டிலுக்கு ஒன்றாக வராமல் 2-3 பேராக வந்து விசாரித்தனர். முதல் தடவையா முடியல!

அப்பொழுதுதான் வலது காலை பார்த்தேன் என் பேண்ட் முட்டிவரை கிழிக்கப்பட்டு chicago style போல இருந்தது.  ஒரு நர்ஸ் வந்து கையில் ஒரு band கட்டிவிட்டார், அதில் பெயர், ID எல்லாம் போட்டு நாய் paas போல இருந்தது.

பின்னர் எதற்கு என்று சொல்லாமலே மாவு கட்டு போட்டனர். அடுத்து ஆரம்பித்தனர் முதலில் XRay  ல் ஆரம்பித்து ரத்தம், சிறுநீர் ன்னு எடுத்தாங்க. CT Scan எடுத்தாங்க, இதுக்கே மணி 2. Ok  தூங்க விடமாட்டாங்க ன்னு யோசிக்கும்போது ரிப்போர்ட் வந்துச்சு, வலது கால் பாதத்துக்கு மேல ஒடஞ்சு போச்சுன்னு சொன்னங்க. உள்ள Tibia, Fibula ன்னு ரெண்டு எலும்புமே காலி!.இடுப்பு எலும்புல crack இருக்கு பட் surgery வேணாம். கால்ல மட்டும் பண்ணிடலாம்னு சொன்னங்க. சரி என்ன வேணா பண்ணுங்க இப்போ தூங்க விடுங்கன்னு கத்த தோணிச்சு ஆனா 2வது தடவையும் முடியல. அப்பறமா ஒரு டாக்டர பார்க்கணும்னு கூட்டிட்டு போனாங்க, அவங்க தான் வழக்கமா கேட்கறத கேட்காம மாத்தி கேட்டாங்க என்னனுனா நீங்க தம் அடிச்சிங்கலானு? இனி ஏமாத்த முடியாதுன்னு ஆமான்னு சொல்லிபுட்டேன்.

ரூம்க்கு போலாமான்னு கேட்டப்ப சொன்னங்க ரூம் இல்ல ஜெனரல் வார்ட்ல படுக்க முடியுமான்னு? மத்த நாள்னா ditch மேல கூட ஓகேன்னு சொல்லிருப்பேன் இப்போ கொஞ்சம் சொகுசு தேவைபடரதால முடியாதுன்னேன். A/C ரூம்னா 2300 சாதா ரூம்னா 1700 ன்னாங்க ஹோட்டல் மாதிரி இதை விட கம்மி இல்லையான்னு கேட்டேன். ஆஸ்பத்திரிக்கார் கேட்டார் Mediclaim இருக்குல்ல அப்பறம் ஏன் பணத்தை பத்தி கவலை படறிங்கன்னு. இப்ப 3வது வாட்டி முடியல!. எனக்கு இது என்ன லாஜிக் ன்னு இப்ப வரைக்கும் புரியலங்க. சாதா ரூமே குடுங்க சாமி ன்னு சொல்லி கிளம்பும்போது போலீஸ் SI வந்தார். எல்லா விவரமும் வாங்கிட்டு சொன்னார், அந்த எமன் வண்டியில்ல ஓட்டிட்டு வந்த குண்டின்னு. பயபுள்ள full மப்புல வந்துருக்கு.  நாலு மணிக்கு ரூம் போய் தூங்கினா 6 மணிக்கு எழுப்பி ரத்தம் எடுக்கனும்னாங்க அடப்பாவிகளா இப்ப எடுத்து 3 மணி நேரந்தான ஆச்சுன்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன்.

காலைல பெரிய டாக்டர் (அப்படித்தான் நர்ஸ் சொன்னாங்க) வந்துட்டு 1 மணிக்கு surgery, முட்டில போட்ட தையல் பிரிச்சு இவங்களோட தையல் போடுவாங்களாம். எதுக்குன்னு கேட்காம சரின்னேன். அப்பறம் தான் காமெடி மாவு கட்டை பிரிச்சா வலது பாதத்துல பின் பக்கமா பெரிய சைஸ் காயம். எங்கயோ வண்டில பட்டு கிழிஞ்சுருக்கு. எவனுமே இத பார்கல. முக்கியமான ஒன்னு இனிமே ஏதும் சாப்பிட கூடாதுன்னார். நீங்க நல்லா இருப்பீங்க தெய்வமேன்னு நெனச்சுட்டு படுத்துட்டேன். ஒரு மணிக்கு இருந்த ஜட்டியும் கழட்டி ஒரு பச்சை கலர் டிரஸ் போட்டு கூட்டிட்டு போனாங்க. எனக்கு சினிமா ஞாபத்துல எங்க அம்மா, என் பொண்டாட்டி, தங்கச்சி எல்லாம் பார்த்ததும் அழுகை வந்துச்சு, இதுல என் பொண்டாட்டி என் பர்ஸ் ல இருந்து எங்க அப்பா போட்டோ காட்டினதும் ரொம்ப அழுதிட்டேன். என் strecher தள்ளிக்கிட்டு வந்த அக்கா (பின்னாடி ரொம்ப தோஸ்த் ஆயிட்டாங்க) ஆபரேஷன் theatre ல ஒரு சின்ன குழந்தைய காட்டி இந்த பாப்பா சும்மா இருக்கு நீ என்ன தம்பி (மனசுக்குள்ள கழுத) இப்படி அழுகறன்னாங்க. அப்பறமா கண்ண தொடச்சு நானே சமதானமாயிட்டேன்.

ஆபரேஷன்:

மயக்க மருந்து குடுத்ததால பாதி மயக்கத்துல இருந்தேன். டாக்டர் உங்களுக்கு ரொம்ப ஹை BP இருக்கு. இந்த வயசுல இவ்ளோ கூடாதுன்னார். எனக்கு என்ன பண்ண சுத்தி இருக்கறவங்க/நடக்கற விஷயம் எல்லாம் bp  ஏத்தர மாதிரி இருக்கு என்ன பண்ண. தம் அடிக்க கூடாது, எவ்ளோ நாளா இந்த பழக்கம்ன்னு கேட்டார். நான் அமைதியா ஒரு வருசமாதான் டாக்டர்ன்னு  பதில் சொல்ல ரொம்ப ஆச்சரியமா இவ்ளோ வயசுக்கு அப்பறமா ஏன் இந்த முடிவுன்னு கேட்டார். ஒரு வருஷம் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சுன்னென்! மனுஷன் கேட்டுட்டு ரொம்ப சிரிச்சார். நான் கூட ஆதித்யா சேனல் போட்டங்களான்னு பார்த்தா நான் சொன்னதுக்கு சிரிசிருக்கார். சிரிச்சுகிட்டே எழுந்து உட்கார், முதுகுல ஊசி போடணும்னார், நான் எதுக்குன்னு கேட்கரதுக்குள்ள, முதுகுல எதையோ தடவி பட்டுன்னு குத்திட்டார் மனுஷன். அதுக்கு பிறகு இடுப்புக்கு அப்பறமா ஏதும் பார்க்காம இருக்கற மாதிரி துணி கட்டிட்டாங்க. இதை பார்த்துட்டே 5 நிமிஷத்துலயே தூங்கிட்டேன். நடுவுல ஏதோ பட்டறையில் இருக்கற மாதிரி சத்தம் வந்தாலும் கண்ண தொறக்க முடியல. டாக்டர் தான் தம்பி தூங்கி 2 மணி நேரமாச்சு எழுந்திரின்னார்.  எழுந்திரிச்சு எல்லாம் சரி ஆயிருக்கும் போலன்னு நெனச்சு நான் எப்ப டாக்டர் நடப்பேன்னு அசட்டுத்தனமா கேட்டு வெச்சேன். அவரும் சீக்கிரமா ன்னுட்டு போய்ட்டார்.

திரும்ப ரூம்க்கு ஒரு மணி நேரம் கழிச்சு கூட்டிட்டு போனாங்க, போகறப்ப வலது கால் மேல ஏதோ antenna மாதிரி இருந்தது. பெட்ஷீட் இருந்ததால என்னனு தெரியல. ரூம்க்கு வந்து பார்த்தா கால்ல முட்டிக்கு கீழ ஒரு drill போட்டு ஒரு கம்பி, பாதத்துல ரெண்டு பக்க முட்டிக்கு கீழ ரெண்டு பக்கமா கம்பி குத்தி வெச்சுருக்கு. இப்ப நெஜமாவே முடியலன்னு மயக்கம் போட்டுட்டேன்.

பின்னாடி தினமும் கால்ல கட்ட பிரிச்சு மாத்த, காலைல ரத்தம் எடுக்கறதுன்னு போயிட்டு இருந்துச்சு. கூடவே முதுகுல ஒரு glucose பாட்டில் போல ஒன்னு தொங்கிக்கிட்டே இருந்துச்சு. அது வலி தெரியாம இருக்க மருந்து போகுதாம். இதுக்கு நடுவுல ஆய் போறத பத்தி யோசிக்கவே இல்ல. அதுவும் நடந்துச்சு 2 நாள் கழிச்சு வருதுன்னா ஒரு பெரிய டப்பா எடுத்துட்டு வந்து பொச்சுக்கு கீழ வெச்சு போன்னு சொன்னா இப்ப 4வது வாட்டி முடியல. இது போல ஒண்ணுக்கு போக ஒரு டப்பான்னு ஆய்டுச்சு.

2nd ஆபரேஷன்:

பெரிய டாக்டர் நாலு நாள் கழிச்சு ஒரு குண்ட போட்டார். அதாவது பாதத்துல ஆன புண்ணுக்கு plastic surgery தான் பண்ணனும் ஒரு வாரம் கழிச்சு பண்ணிக்கலாம்னார், நான் என்ன வேண்டாம்னா சொல்ல முடியும். ஒரு வாரம் கழிச்சு திரும்ப மயக்கம், முதுகுல ஊசி, பட்டறை வேலைன்னு பண்ணி இடது தொடைல சதைய எடுத்து பாதத்துல வெச்சுட்டாங்க. கூடவே கால்ல ரெண்டு கம்பி சேத்து வெச்சுட்டாங்க.

ரூம்ல என்ன தொல்லைன்ன வெளில generator வெச்சுருகானுங்க போல செம சத்தம், அதனால எப்பவும் ஜன்னல் சாத்தியே வெச்சுருக்கணும். அதனால புளுக்கம் அதிகமாகி சரியா டாக்டர் rounds வர்றப்ப நெளிஞ்சுட்டேன். அவரு உடனே பையனுக்கு முதுகு புண்ணாகிடும் ஒரு air bed வாங்கி போட்ருங்கன்னு சொல்லிட்டார். எங்க வீட்ல உடனே அது 100-200 ன்னு நெனச்சுட்டு சரின்னு தலையாட்ட உடனே கொண்டு வந்து போட்டுட்டு 6000 கட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க. இதுக்கு மேல எப்படி தூக்கம் வரும், அது வேற இட்லிய பரப்பி வெச்சு படுத்த மாதிரி இருக்க ரெண்டே நாள்ல தூக்கி போட்டுட்டேன்.

பில்:
 
இதுக்கு நடுவுல கேள்விப்பட்டேன் வீட்டுக்கு அனுப்ப போறதா. சந்தோசமா இருந்துச்சு, ஆனா அது பில் வர வரைக்கும் தான். 95,000 போட்டு குடுத்துருந்தாங்க. தல கிறுகிறுக்க கை நடு நடுங்க வாங்கி பார்த்தேன். எல்லாமே detailed ஆ போட்ருக்க ஒன்னு மட்டும் உறுத்துச்சு. அது Cheif வந்து பார்த்ததுக்கு 16,000 ன்னு. அவரு ஒரு நாள் வந்து எங்கிட்ட கேட்ட ஒரே கேள்வி தம்பி நல்லா இருக்கியான்னு? அதுக்கு இவ்ளோ பணமா. நல்ல வேலை நெறைய கேட்கலன்னு நெனச்சுகிட்டேன். மொதல்லையே 15 நாள் ஆயிருக்க பணம் வேற இல்ல அது ரெடி பண்ண வேண்டி கூட ரெண்டு நாள் இருந்தேன் அதுதான் கொடுமை. டாக்டர்ல இருந்து கக்கூஸ் கூட்ற ஆயா வரைக்கும் இன்னும் ஏன் கெளம்பலன்னு கேட்டுட்டாங்க. 

கால்ல கம்பியோட போயிட்டு ஒரு 10 நாள் கழிச்சு வர சொல்லிருந்தாங்க. ஆனா கிளம்பறப்ப டாக்டர், நர்ஸ் தவிர strecher தள்ளினவர், கக்கூஸ் clean பண்ணவங்க, ரூம் கூட்டினவங்கன்னு ஷிப்டு க்கு 3 பேர், இவங்க எல்லாரும் ஆளுக்கு 50 ரூபா கேட்க, நான் திரும்ப வருவேங்க அப்ப வேணா தர்றேங்கன்னு அவங்க அடம் பிடிக்க வேற வழி இல்லாம குடுத்தா அடுத்த ஷாக். ஆம்புலன்ஸ் அதுல டிரைவர் அவருகூட ஹெல்பர் இவங்க ரெண்டு பெரும் காசு கேட்டா பரவாயில்ல வண்டி வாடகை வேற கேட்க செம டென்ஷன் ஆய்டுச்சு. என்னடா மொத்தமா சுருட்டலாம்ன்னு முடிவு பண்ணிட்டிங்களான்னு கேட்க அவரு அங்கேயே கேட்காம விட்டது உங்க தப்புன்னு என்ன சொன்னார். இனி சுத்தமா முடியாதுன்னு குடுத்துட்டேன்.
எல்லா பில், ரிப்போர்ட் ல எல்லாம்  hospital பேருக்கு கீழ ஏதோ டிரஸ்ட்ன்னு பேரு போட்டிருந்துச்சு. நம்ம நாட்டுல மட்டும் தான் இப்படி எல்லாம் சேவை பண்ண முடியும்னு தோணுது.

வீட்லயாவது இனி நிம்மதியா இருக்கலாம்ன்னு நெனச்ச நெனப்புல குப்பைய கொண்டு வந்து போட்டுட்டாங்க. தினமும் 10-20 பேர் பார்க்க வந்து டரியலாகிட்டங்க.

தொடரும்...